திருச்சிற்றம்பலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அரிசி-கோதுமை மூட்டைகள் பறிமுதல் விற்பனையாளர் பணியிடை நீக்கம்


திருச்சிற்றம்பலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அரிசி-கோதுமை மூட்டைகள் பறிமுதல் விற்பனையாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 13 Oct 2021 6:53 PM GMT (Updated: 13 Oct 2021 6:53 PM GMT)

திருச்சிற்றம்பலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அாிசி- கோதுமை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

திருச்சிற்றம்பலம்:-

திருச்சிற்றம்பலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அரிசி- கோதுமை மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

ரேஷன் கடை ஊழியர்

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 56). இவர், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள உப்புவிடுதி மற்றும் பொக்கன்விடுதி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பகுதி நேர ரேஷன் கடைகளில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
கொரோனா காலத்தின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை அரசு கூடுதலாக வழங்கியது.

138 மூட்டைகள் பறிமுதல்

இந்த பொருட்களை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்காமல் சாமிநாதன், புனல்வாசல் வாடிக்காடு கிராமத்தில் ஒரு அங்கன்வாடி மைய கட்டிடத்தில் பதுக்கி வைத்துள்ளதாக பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட 138 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு பட்டுக்கோட்டையில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பணியிடை நீக்கம்

இதுதொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர் சாமிநாதனிடம் விசாரணை நடந்தது. இதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை கூட்டுறவுத்துறை செயலாட்சியர் மாதவமணி, ரேஷன் கடை விற்பனையாளர் சாமிநாதனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Next Story