விவசாயி வெட்டிக்கொலை


விவசாயி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 13 Oct 2021 7:27 PM GMT (Updated: 13 Oct 2021 7:27 PM GMT)

பழனி அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பழனி : 

பழனி அருகே உள்ள பெருமாள்புதூரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி மீனாட்சி (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டது.  


இதையடுத்து கணவரிடம் கோபித்துக் கொண்டு மீனாட்சி தனது குழந்தைகளுடன், அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று இரவு கருப்புசாமி அவருடைய வீட்டு முன்பு மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பழனி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 


அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சத்யராஜ் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 


பின்னர் கருப்பசாமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கருப்புசாமியை வெட்டிக் கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? என்பது குறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story