பெண் ஆசிரியை பயிற்றுனர்களிடம் தங்க நகை பறித்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை


பெண் ஆசிரியை பயிற்றுனர்களிடம் தங்க நகை பறித்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 13 Oct 2021 7:38 PM GMT (Updated: 13 Oct 2021 7:38 PM GMT)

பெண் ஆசிரியை பயிற்றுனர்களிடம் தங்க நகை பறித்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி, அக்.14-
பெண் ஆசிரியை பயிற்றுனர்களிடம் தங்க நகை பறித்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சங்கிலி பறிப்பு
திருச்சி உறையூர் நாச்சியார் பாளையத்தில் உள்ள காமராஜர் கல்வி கூடத்தில் கடந்த 2014-ம் ஆண்டு காயத்ரி, தூயமலர் மார்டினா  ஆகியோர் ஆசிரியர் பயிற்றுனர்களாக வேலை செய்து வந்தனர். தூயமலர் மார்டினா கல்வி கூடத்தில் எம்.எஸ்சி லைப் சயின்ஸ் படித்து கொண்டே பயிற்றுனராக பணி செய்து வந்தார். அந்த கல்வி கூடத்திற்குள் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிற்பகல் 2 மணிக்கு, திருச்சி கே.கே.நகர் சம்கோ மீட்டர் ரோட்டை சேர்ந்த லியோ என்ற ரொனால்டு புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி காயத்ரி அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ஒரு பவுன் வளையல்களையும், தூய மலர் மார்டினா அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலி என மொத்தம் 5 பவுன் தங்க நகைகளை பறித்தார்.
பின்னர், இருவரையும் வெளியில் வரமுடியாதபடி, குளியல் அறையில் தள்ளி பூட்டி விட்டு லியோ தப்பி சென்றார்.அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டனர். காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லியோவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருச்சி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.
5 ஆண்டு சிறை
இந்நிலையில் தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி சாந்தி முன்னிலையில் இறுதிக்கட்ட விசாரணை முடிந்தது. அதாவது அரசு தரப்பில் 6 சாட்சிகள், 7 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, லியோ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார். ஆசிரியை பயிற்றுனர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்த லியோ என்கிற ரொனால்டு ரோஸ் லியோ என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

Next Story