பேரிடர் காலங்களில் தற்காத்து கொள்வது எப்படி? தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஒத்திகை


பேரிடர் காலங்களில் தற்காத்து கொள்வது எப்படி? தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஒத்திகை
x
தினத்தந்தி 13 Oct 2021 7:42 PM GMT (Updated: 13 Oct 2021 7:42 PM GMT)

சேலம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

சேலம்:
ஒத்திகை
சர்வதேச பேரிடர் பாதிப்பு குறைப்பு தினத்தையொட்டி நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளின் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.
அப்போது, மழை, தீ மற்றும் கட்டிட இடிபாடுகள் போன்ற பேரிடர் பாதிப்புகளில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை மிதவை படகுகள், உயிர் காக்கும் மிதவை உபகரணங்கள், கட்டிட இடர்பாடுகள், அவசர கால மீட்பு எந்திரங்கள், மரம் அறுக்கும் எந்திரங்கள், தீயணைப்பான்கள் உள்ளிட்ட நவீன எந்திரங்களை கொண்டு எப்படி மீட்பது? என்பது குறித்து ஒத்திகை மூலம் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முருகேசன் கலந்து கொண்டு பேரிடர் தணிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து பேசினார். இதனை தொடர்ந்து தீயணைப்பு நவீன கருவிகளை எப்படி கையாள்வது? என்பது குறித்தும் கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்களின் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.
விழிப்புணர்வு
மேலும், வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படுகிற புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசும்போது, பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மாட்டிக்கொண்டால் அவர்களை எப்படி மீட்பது? என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், வருவாய்த்துறை, தீயணைப்பு மீட்புத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்கள பணியாளர்களை கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது, என்றார். 
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, சேலம் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, துணை கலெக்டர் (பயிற்சி) கனிமொழி, தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) ராஜேஷ்குமார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story