திருநின்றவூரில் மூதாட்டி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவு


திருநின்றவூரில் மூதாட்டி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவு
x
தினத்தந்தி 14 Oct 2021 8:56 PM GMT (Updated: 14 Oct 2021 8:56 PM GMT)

திருநின்றவூரில் காலில் காயம் ஏற்பட்ட எலும்பு முறிவால் அவதியடைந்த மூதாட்டி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.

ஆவடி,

ஆவடி அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை பாடசாலை தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 70). இவர் திருமணமான சிறிது நாளில் கணவரை விட்டு பிரிந்து விட்டார்.

இதனால் தனியாக இருந்த இவர், நடுக்குத்தகை பகுதியில் உள்ள தனது தம்பி வெங்கடேசன் (69) என்பவர் வீட்டில் தங்கி அவரது பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணிக்கு ஒரு விபத்து ஏற்பட்டு அதன்மூலம் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதில் இரும்பு தகடு வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அடிக்கடி அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ராணி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதில், தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மூதாட்டி உடல் கருகி...

பின்னர் நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு அவரது தம்பி வெங்கடேசன் வந்தபோது, கருகிய துர்நாற்றம் வீசியதால் ஏதோ விபரீதம் நடந்ததை அறிந்து வீட்டில் உள்ள அறையில் ஓடிசென்று பார்த்தார். அப்போது அங்கு தனது சகோதரி ராணி தீக்குளித்து இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கவே, தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு திருநின்றவூர் போலீசார் விரைந்து வந்தனர். இதையடுத்து அங்கு உடல் கருகி கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story