இருதரப்பினர் மோதல்; 7 பேர் கைது


இருதரப்பினர் மோதல்; 7 பேர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2021 1:51 PM GMT (Updated: 16 Oct 2021 1:51 PM GMT)

சாத்தான்குளம் அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே தச்சன்விளையை சேர்ந்தவர் சித்திரைவேல் மகன் சிவராஜ் (வயது 21). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மிக்கேல் மகன் நாராயணராஜா (21) என்பவருக்கும் சமுதாய தலைவர் விளம்பர பலகை வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தசரா குழுவினர் தச்சன்விளை பிள்ளையார் கோவில் வழியாக சென்றபோது நாராயணராஜா, சிவராஜ் தரப்பினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தாக்கி கொண்டதில் சிவராஜ், நாராயணராஜா ஆகியோர் காயம் அடைந்தனர். மோதல் தொடர்பாக இருதரப்பினரும் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
சிவராஜ் புகாரின்பேரில் முத்துகிருஷ்ணன், சுபாஷ், மாயாண்டி, சுடலைமுத்து ஆறுமுகவேல், மற்றொரு சுடலைமுத்து ஆகிய 6 பேர் மீதும், நாராயணராஜா புகாரின்பேரில் அஜீத்குமார், சாரதி, ஜெயக்குமார், முத்து, சேகர், சாம் ஆகிய 6 பேர் மீதும் மொத்தம் 12 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் வழக்குப்பதிவு செய்தார். அவர்களில் கிருஷ்ணன், சுபாஷ், மாயாண்டி, சுடலைமுத்து, ஆறுமுகவேல், அஜித்குமார், சாரதி ஆகிய 7 பேரை கைது செய்தார். மேலும் 5 பேரை தேடி வருகிறார்.

Next Story