திருவண்ணாலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை நீட்டிப்பு


திருவண்ணாலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2021 4:40 PM GMT (Updated: 17 Oct 2021 4:40 PM GMT)

திருவண்ணாலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து 19-வது மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் வரவேண்டாம் என்று கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து 19-வது மாதமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் வரவேண்டாம் என்று கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
தொற்று பரவல் குறைவு காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு கடந்த 15-ந்தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. 

இந்த மாதத்துக்கான பவுர்ணமி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) இரவு 7.56 மணிக்கு தொடங்கி மறுநாள் (புதன்கிழமை) இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் 19-வது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பக்தர்கள் வரவேண்டாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு பவுர்ணமி தினங்களான நாளை மறுதினம் காலை 6 மணி முதல் 21-ந்தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் தொற்று பரவலை தடுக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story