சரக்கு வேன்கள் கவிழ்ந்து 28 பேர் படுகாயம்


சரக்கு வேன்கள் கவிழ்ந்து 28 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Oct 2021 7:30 PM GMT (Updated: 17 Oct 2021 7:30 PM GMT)

சரக்கு வேன்கள் கவிழ்ந்து 28 பேர் படுகாயமடைந்தனர்.

கீழப்பழுவூர்:

துக்க காரியத்திற்கு சென்றனர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் துக்க காரியத்திற்காக ஒரு சரக்கு வேனில் அயன்ஆத்தூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். சரக்கு வேனை க.மேட்டுதெருவை சேர்ந்த மனோகரன் ஓட்டினார். ஜெயங்கொண்டம் சாலையில் பொய்யூரை அடுத்துள்ள ஒரு பள்ளி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதில் சரக்கு வேனில் பயணம் செய்த புண்ணியகோடி(51), ராமகிருஷ்ணன்(67), பச்சையம்மாள் (60) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகாயம்
இந்த விபத்து நடந்து சில மணி நேரம் கழிந்த நிலையில், மற்றொரு விபத்தும் ஏற்பட்டது. அதாவது மால்வாய் கிராமத்தை சேர்ந்த சின்னதுரையின் மகன் துரைமுருகன்(22). இவர் களைவெட்டும் பணிக்காக திருமானூர் காந்தி நகர் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களை, நேற்று மாலை மீண்டும் காந்தி நகர் பகுதிக்கு கொண்டு சென்று விடுவதற்காக சுமார் 30-க்கும் மேற்பட்டவர்களை அவரது சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு சன்னாவூர் சாலையில் வந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையை விட்டு இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் பள்ளத்தில் சரிந்து கவிழ்ந்தது.
இதில் சரக்கு வேனில் பயணித்த ஆனந்தி(35), பெரியாச்சி(50), பழனிசாமி உள்ளிட்ட சுமார் 13 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 2 இடங்களில் சரக்கு வேன் கவிழ்ந்து 28-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பறிமுதல் செய்ய வேண்டும்
‌இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சரக்கு வேனில் ஆட்களை ஏற்றி செல்வது வழக்கமாக உள்ளது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வது தவறு. எனவே ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் வாகன உரிமைைய ரத்து செய்ய வேண்டும் என்றனர். இந்தப் பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஒரு சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story