திருச்சி என்ஜினீயரிடம் ரூ.25½ லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு


திருச்சி என்ஜினீயரிடம் ரூ.25½ லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Oct 2021 1:47 PM GMT (Updated: 19 Oct 2021 1:47 PM GMT)

திருவள்ளூரில் மார்க்கெட் பகுதியில் கட்டிடம் கட்டுவதாக கூறி திருச்சி என்ஜினீயரிடம் ரூ.25½ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி, அக்.20-
திருவள்ளூரில் மார்க்கெட் பகுதியில் கட்டிடம் கட்டுவதாக கூறி திருச்சி என்ஜினீயரிடம் ரூ.25½ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயர்
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். சிவில் என்ஜினீயரான இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சென்னை ஆவடி திருமலைநகரை சேர்ந்த சுரேஷ்பால் என்பவருடன் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிராமம் வெங்கடாபுரம் மார்க்கெட் பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டார்.
இதற்காக பிரபாகர் பல்வேறு தவணைகளில் சுரேஷ்பால் வங்கி கணக்கிற்கு ரூ.18 லட்சம் வரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு பிரபாகர் அந்த இடத்தின் வில்லங்க சான்றிதழை வாங்கி பார்த்தார்.
மோசடி செய்தவர் மீது வழக்கு
அப்போது அந்த இடம் அடமானம் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகர் இதுகுறித்து சுரேஷ்பாலிடம் கேட்டார். பின்னர் தனது ரூ.18 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து ரூ.25 லட்சத்து 68 ஆயிரத்தை திருப்பி தர வேண்டும் என்று கூறினார்.
ஆனால் சுரேஷ்பால் பணம் தராமல் மோசடி செய்ததுடன், அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பிரபாகர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன், புகார் கூறப்பட்ட சுரேஷ்பால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story