சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்


சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
x
தினத்தந்தி 20 Oct 2021 3:24 PM GMT (Updated: 20 Oct 2021 3:24 PM GMT)

ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

வெளிப்பாளையம்:
ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.  
அன்னாபிஷேகம்
நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காயாரோகண சாமிக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், பன்னீர், . பஞ்சாமிர்தம், விபூதி, கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்டபொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அன்னத்தால் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
 அதேபோல் நாகை பகுதியில் உள்ள அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகியநாதர் கோவில், வீரபத்திரசாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்திநாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. 
ஐப்பசி பரணி விழா 
நாகையை அடுத்த வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ளது. ஐப்பசி பவுர்ணமியையொட்டி கோரக்க சித்தருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) ஐப்பசி பரணி விழா  நடைபெறுகிறது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நீலாயதாட்சி அம்மன் கோவிலில் உள்ள அழுகணி சித்தருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை கோரக்கர் சித்தர் ஆசிரம அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்ட சாதத்தை வேதாரண்யம் சன்னதி கடலுக்கு கொண்டு கரைத்தனர். அன்னம் கரைய கரைய மழை பெய்யும் என்பது ஐதீகம். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. 

Next Story