தெரு விளக்கு ஒளிர தொடங்கியது


தெரு விளக்கு ஒளிர தொடங்கியது
x
தினத்தந்தி 20 Oct 2021 8:47 PM GMT (Updated: 20 Oct 2021 8:47 PM GMT)

தெரு விளக்கு ஒளிர தொடங்கியது

தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே முதல்சேத்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள தெரு விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவது இல்லை. இதனால் இரவில் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். விஷ பூச்சிகளும் அருகில் உள்ள வீடுகளுக்குள் சென்று விடுகின்றன. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் அந்தபகுதி பொதுமக்கள் தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

தஞ்சை அருகே திருக்காட்டுப்பள்ளி அருகில் கண்டமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து வரகூர் செல்லும் சாலையில் ஓமந்தோப்பு பகுதியில் ஒரு வயலில் மின்கம்பம் உள்ளது-. இந்த மின்கம்பம் தற்போது சேதமடைந்து கான்கிரீட் காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வயல் பகுதியில் வேலைபார்க்கும் தொழிலாளிகள் அசாம்பாவிதம் ஏதும் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உயிர்பலி ஏதும் ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா வழுத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அந்த பகுதி மக்கள் குப்பைகள் கொட்டுவதற்காக சாலையோரம் குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த குப்பை தொட்டி சேதமடைந்து பயனற்று கிடக்கிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தில் குப்பை தொட்டி தலை கீழ் கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர். சிலர் குப்பைகளை தீயிட்டு கொழுத்துகின்றனர். இதனால் அந்தபகுதியில் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள்  கொட்ட குப்பை தொட்டி வைக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Next Story