தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Oct 2021 8:48 PM GMT (Updated: 20 Oct 2021 8:48 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜோடுகொத்தூர், யானைக்கால் தொட்டி கிராமங்களில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. வேப்பனப்பள்ளி அருகே கோழி கழிவுகளை சாலையோரம் உள்ள விவசாய நிலங்களில் கொட்டுகிறார்கள். இதனால் அருகில் உள்ள கிராமங்களில் ஈக்களும், நோய்களும் அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களில் கொட்டப்படும் கோழிகவுகளால் வாழை, மா, தென்னை, கத்திரி பூக்கள் என அனைத்து விவசாயப் பயிர்களையும் ஈக்கள் அழித்து வருகின்றன. இந்த கோழிவுகளால் சுகாதாரசீர்கேடு ஏற்படுவதுடன் சாலைகளில் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள் பரவுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பகுதியில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, கிருஷ்ணகிரி.
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்
தர்மபுரி பஸ்நிலைய பகுதியை ஒட்டி முக்கிய கடை வீதிகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்த பகுதியில் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த எல்லைக்கோடுகள் மற்றும் எல்லை கயிறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மீறி சாலையில் பெரும்பகுதியை ஆக்கிரமித்தபடி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
-தினேஷ், தர்மபுரி.
திருடர்கள் தொல்லை
தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் திருடர்களின் தொல்லை அதிகம் உள்ளன. பயணிகளின் கவனத்தை திசை திருப்பி பணம், நகை, பேக்கை திருடிச்செல்கின்றனர். தங்களது உடைமைகளை இழந்தவர்கள் கஷ்டப்படுவதை பார்க்க பாவமாக இருக்கிறது. எனவே சமூக விரோதிகளை தடுக்க, பகலில் காவல்துறையினர் ரோந்து செல்ல வேண்டும்.
-தமிழ்செல்வி , தர்மபுரி.
அள்ளப்படாத குப்பைகள்
சேலம் அம்மாபேட்டை மேட்டுத்தெரு காந்தி மைதானம் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் குப்பைகளை அள்ள நடவடிக்க எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், அம்மாபேட்டை, சேலம்.
சேறும், சகதியுமான சாலை
சேலம் அயோத்தியாப்பட்டணம் முதல் மகுடஞ்சாவடி கணவாய் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. மழைக்காலம் என்பதால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. பல வருடங்களாக இந்த சாலை இதே நிலையில் தான் உள்ளது. மருத்துவ அவசரம் போன்றவற்றுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், சேலம்.
சேலம் சூரமங்கலம் தனியார் மருத்துவமனை அருகே தார் ரோடு உள்ளது. இந்த சாலை தொடங்கும் இடத்தில் பழுது ஏற்பட்டு மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையில் சாலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இருதயம், சூரமங்கலம், சேலம்.
சேலம் மேற்கு வட்டம் தளவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆவின் பால்பண்ணை விநாயகர் கோவிலில் இருந்து சேலத்தாம்பட்டி வரை செல்லும் சாலை மற்றும் தளவாய்பட்டியில் இருந்து கோடிப்பள்ளம் வரை செல்லும் சாலைகளில் புதிதாக சாலை போடுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டன. ஒரு வருடமாகியும் தார்சாலை அமைக்கப்படவில்லை. மழைக்காலம் என்பதால் சாலை சேறு சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், தளவாய்பட்டி, சேலம்.
சாக்கடை கால்வாயில் மின்கம்பம்
சேலம் மாவட்டம் எடப்பாடி 19-வது வார்டு பழைய தாலுகா அலுவலகம் அருகில் சாக்கடை கால்வாய் நடுவில் மின்சார கம்பம் உள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாமல் அங்கு தேங்கி கிடக்கிறது. வீடுகளில் இருந்தும் கழிவுநீரை வெளியே செல்ல முடியாமல் தேங்கும் நிலை உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மின் கம்பத்தை அகற்றினால் கழிவு நீர் தேங்குவதை தவிர்த்து விடலாம். மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், எடப்பாடி, சேலம்.
=====
தெருநாய்கள் தொல்லை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 17-வது வார்டு மாரக்கால் காடு, கொத்துகாரன்காடு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. இந்த தெருநாய்கள் ரோட்டில் செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடித்து விடுகிறது. மேலும் இரவில் தெருநாய்களுக்குள் சண்டை போடுவதால் அந்த பகுதியில் பொதுமக்கள் தூக்கம் கலைந்து அவதிப்படுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இரா.தங்கமணி, குமாரபாளையம், நாமக்கல்.


Next Story