பார்சன்ஸ்வேலி அணை நீர்மட்டம் பாதியாக குறைந்தது


பார்சன்ஸ்வேலி அணை நீர்மட்டம் பாதியாக குறைந்தது
x
தினத்தந்தி 21 Oct 2021 2:32 PM GMT (Updated: 21 Oct 2021 2:32 PM GMT)

போதிய மழை பெய்யாததால் ஊட்டி பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்தது.

ஊட்டி

போதிய மழை பெய்யாததால் ஊட்டி பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் பாதியாக குறைந்தது.

நீர்மட்டம் குறைவு

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் போதிய அளவு பெய்யாததால் அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணையாக பார்சன்ஸ்வேலி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து முதல், 2-வது, 3-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மொத்தம் உள்ள 36 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், தங்கும் விடுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பிற அணைகளில் இருந்து தண்ணீர் குறைவாக எடுக்கப்படுகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 25.30 அடியாக உள்ளது.

தொடர் மழை

கடந்த ஆண்டு இதே சமயத்தில் நீர்மட்டம் 32 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 23 அடி கொள்ளளவு கொண்ட மார்லிமந்து அணை நீர்மட்டம் 12 அடியாகவும், 35 அடி கொள்ளளவு கொண்ட கோரிசோலா அணை நீர்மட்டம் 14 அடியாகவும் இருக்கிறது. 31 அடி கொள்ளளவு கொண்ட தொட்டபெட்டா அப்பர் அணை நீர்மட்டம் 25 அடியாக குறைந்து உள்ளது.39 அடி கொள்ளளவை கொண்ட டைகர்ஹில் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் உபரிநீர் வெறியேறி கொண்டு இருக்கிறது. பிற சிறிய 5 அணைகள் உள்ளது. பருவமழை போதிய அளவு பெய்தால் நீர்மட்டம் உயர வாய்ப்பு இருக்கிறது.


Next Story