ரூ.2¼ லட்சம் லாட்டரி சீட்டுகள் கடத்தல்


ரூ.2¼ லட்சம் லாட்டரி சீட்டுகள் கடத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2021 3:01 PM GMT (Updated: 21 Oct 2021 3:01 PM GMT)

குமுளியில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த 2 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

தேனி : 

கேரள மாநிலம் குமுளியில் இருந்து தேனி மாவட்டத்துக்கு லாட்டரி சீட்டுகள் கடத்தி செல்வதாக கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் லோயர்கேம்ப் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது குமுளியில் இருந்து சந்தேகப்படும்படி ஒரு ஸ்கூட்டரில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து போலீசார் அவர்கள் வந்த ஸ்கூட்டரை சோதனை செய்தனர். 

அதில் இருக்கையின் கீழ் பகுதியில் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான 5,700 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை கடத்தி செல்வது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், அனுமந்தன்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது 40), கம்பம் சர்ச் தெருவை சேர்ந்த மோகன் (45) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அந்த லாட்டரி சீட்டுகளையும், ஸ்கூட்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story