தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 21 Oct 2021 3:28 PM GMT (Updated: 21 Oct 2021 3:28 PM GMT)

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தேனி: 

பெரியகுளம் பங்களாபட்டியை சேர்ந்த பாலமுருகன் மகன் மதன்குமார் என்ற மின்னல் (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு 3 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதை அறிந்த சிறுமியின் தாய், பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனர். 

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பு கூறினார். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மதன்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து மதன்குமாரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story