கள்ளநோட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணை


கள்ளநோட்டுகள் தொடர்பாக போலீசார்  விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2021 5:01 PM GMT (Updated: 21 Oct 2021 5:01 PM GMT)

ராமநாதபுரம் வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் இருந்தது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் வங்கியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் இருந்தது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புகார்
ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மாதம் 22-ந் தேதி அனுப்பிய நோட்டுகளில் ஒரு 500 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாகவும், 23-ந் தேதி அனுப்பிய நோட்டுகளில் 100 ரூபாய் நோட்டுகள் 3-ம் கள்ள நோட்டுகளாக இருந்துள்ளது. 
இதுதொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா மேலாளர் அமர்நாத் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு புகார் செய்துள்ளார். ராமநாதபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பழைய கிழிந்த ரூபாய் நோட்டு களில் 4 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக உள்ளதால் அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். 
இந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வங்கியில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிய போது இவ்வாறு கள்ள நோட்டுகளை நுழைத்து விட்டார்களா அல்லது வங்கி பண பரிமாற்றத்தின்போது வந்துள்ளதா என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.
விசாரணை 
மேலும், இவ்வாறு பழைய கிழிந்த நோட்டுகளாக இருப்பதால் இந்த கள்ள நோட்டுகள் இதுநாள்வரை புழக்கத்தில் இருந்து பணமதிப்புடன் கைமாறி வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கள்ள நோட்டுகளை யார் புழக்கத்தில் விட்டது? இதுபோன்று மேலும் புழக்கத்தில் கள்ள நோட்டுகள் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story