தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி விபத்து -2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி விபத்து -2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2021 5:42 PM GMT (Updated: 21 Oct 2021 5:42 PM GMT)

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நல்லம்பள்ளி:
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு மருந்து மாத்திரை பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று இரவு வந்தது. லாரியை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது தொப்பூர் கணவாய் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மருந்து பார லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்டு பார லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருந்து பார லாரி டிரைவர் காயம் ஏற்பட்டு விபத்தில் சிக்கி தவித்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கசாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து விபத்தில் சிக்கி தவித்த டிரைவர் அசோக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story