நியாயமான முறையில் நடத்த கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்


நியாயமான முறையில் நடத்த கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Oct 2021 6:04 PM GMT (Updated: 21 Oct 2021 6:04 PM GMT)

மரக்காணம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலை நியாயமான முறையில் நடத்த கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தாா்.

விழுப்புரம், 

மரக்காணம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கண்ணன், நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான மறைமுக தேர்தலில் மரக்காணம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு நான் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறேன். இந்த ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 26 கவுன்சிலர்களில் எனக்கு ஆதரவாக 16 கவுன்சிலர்கள் மறைமுக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். என்னுடைய வெற்றியை தடுக்க எங்கள் கட்சியில் சிலர், எனக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ள கவுன்சிலர்களை மிரட்டி அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். எனவே இந்த மறைமுக தேர்தலில் பிரச்சினைகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே மறைமுக தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும் வன்முறையை தடுத்து நியாயமான முறையில் தேர்தலை நடத்தி அவற்றை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் எனக்கும் உரிய பாதுகாப்பு அளித்து நியாயமான முறையில் வெற்றியை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story