தொழிலாளர் நல வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


தொழிலாளர் நல வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 21 Oct 2021 6:05 PM GMT (Updated: 21 Oct 2021 6:05 PM GMT)

அரியலூர் அருகே தொழிலாளர் நல வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தாமரைக்குளம், 
தொழிலாளர் நல வாரிய ஊழியர்
அரியலூர் ஜெயலலிதா நகரை சேர்ந்தவர் சந்திரன்.இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 58). இவர் தொழிலாளர் நல வாரியத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அலுவலக கூட்டம் சம்பந்தமாக கடந்த 19-ந் தேதி இரவு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றார்.  இந்தநிலையில் அலுவலக கூட்டம் முடிந்து நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. 
நகை, பணம் கொள்ளை
இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வி வீட்டின் உள்ளே சென்றார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.16 ஆயிரத்து 500 ஆகியவை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மோட்டார் சைக்கிள் திருட்டு
இந்தநிலையில் கலைச்செல்வி வீட்டின் முன்பக்க கதவு வழியாக உள்ளே சென்ற கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளனர். முன் பக்கம் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் பின்பக்கம் உடைத்து சென்றார்களா? அல்லது பின்பக்கம் வழியாக கதவை உடைத்து வந்து முன்பக்கம் சென்றார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அருகிலுள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.  இந்தநிலையில், சுப்பிரமணியர் நகரை சேர்ந்த சாகுல் ஹமீது என்பது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது.
வலைவீச்சு
கலைச்செல்வி வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை திருடினார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடந்த ஆண்டும் இதேபோல் தீபாவளி நெருங்கும் நேரத்தில் அப்பகுதியில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story