வாய்க்காலில் மூழ்கி பெண் பலி; உறவினர்கள் மறியல்


வாய்க்காலில் மூழ்கி பெண் பலி; உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 21 Oct 2021 6:28 PM GMT (Updated: 21 Oct 2021 6:28 PM GMT)

குளித்தலை அருகே வாய்க்காலில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்ய கால தாமதம் செய்ததாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலை
பெண் பலி
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேலகுட்டப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி சித்ரா (வயது 38). இவர் நேற்று காலை பாத்திரங்களை கழுவுவதற்காக அப்பகுதியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் இவர் வீட்டிற்கு வராததால் இவரது குடும்பத்தார் வாய்க்காலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வாய்க்காலின் படிக்கட்டில் பாத்திரங்கள் மட்டும் இருந்துள்ளன. ஒருவேலை சித்ரா தவறி வாய்க்காலில் விழுந்து இருக்கலாம் என்று கருதிய அவர்கள் வாய்க்காலில் குதித்து தேடியுள்ளனர். 
 மேலும் இதுகுறித்து குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி சித்ராவை தேடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு சித்ரா பிணமாக மீட்கப்பட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. 
சாலை மறியல்
பின்னர் குளித்தலை போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் காலை சுமார் 11 மணிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு சித்ராவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் அரசு மருத்துவர் ஒருவர் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து சித்ராவின் உறவினர்கள் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சித்ராவின் உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு திருச்சி- கரூர் சாலையில் அரசு மருத்துவரை கண்டித்தும், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் அல்லது பணி மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மறியலால் திருச்சி-கரூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story