மது விற்ற 10 பேர் கைது


மது விற்ற 10 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2021 6:29 PM GMT (Updated: 21 Oct 2021 6:29 PM GMT)

குளித்தலை, நொய்யல், தரகம்பட்டி பகுதிகளில் மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

குளித்தலை
மது விற்றவர் கைது
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வை.புதூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் தனது வீட்டின் பின்புறம் வைத்து மது விற்ற அதேபகுதியை சேர்ந்தவர் கரிகாலன் (வயது 52) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 210 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நொய்யல்
நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மரவாபாளையம் காட்டுப்பகுதியில் நடராஜன் (51), மூலிமங்கலம் பிரிவு சாலை அருகே குழந்தைமணி (54), அய்யம்பாளையம் டாஸ்மாக் அருகே தள்ளுவண்டியில் புஞ்சை கடம்பங்குறிச்சியைச் சேர்ந்த மணிகண்டன் (32), அய்யம்பாளையம் டாஸ்மாக் அருகே உள்ள பெட்டிக் கடையில் ஆவரங்காட்டுப்புதூரை சேர்ந்த சுதாகர் (31), மூலிமங்கலம் பிரிவு சாலை அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் தோட்டக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ் (52) ஆகிய 5 பேரும் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 5 பேரையும் வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தரகம்பட்டி
தரகம்பட்டி அருகே உள்ள கடவூர் ஒன்றிய பகுதியில் மது விற்கப்படுவதாக பாலவிடுதி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடவூர் புங்கம்பாடி பகுதியில் தங்கராஜ், சுடுகாட்டு பகுதியில் சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த முருகன், தளிவாசல் பகுதியில் ஜெகநாதன் ஆகிய 3 பேரையும் மது விற்றதாக போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சக்கம்பட்டி டாஸ்மாக் பகுதியில் மது விற்ற மைலம்பட்டியை சேர்ந்த ஜாகீர் உசேனை சிந்தாமணிப்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் 4 பேரிடம் இருந்து மொத்தம் 71 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story