கல்லூரி மாணவியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை


கல்லூரி மாணவியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 21 Oct 2021 7:56 PM GMT (Updated: 21 Oct 2021 7:56 PM GMT)

கல்லூரி மாணவியை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

திருச்சி 
திருச்சி தென்னூர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பின் தலைவராக உள்ளார். இவருடைய மகள் மலர்விழி மீரா(வயது 19). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவு 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய உறவினர் (அண்ணன் உறவுமுறை) பாலமுரளி கார்த்திக் (34). 
 பாலமுரளி கார்த்திக், மலர்விழி மீராவுடன் பழகி வந்தார். இதுபற்றி அறிந்த அவரது தாய் செல்வி தனது மகளை கண்டித்ததோடு, அவருடன் பழக வேண்டாம் என கூறி எச்சரித்தார். இதனால் மலர்விழி மீராவும், அவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுரளி கார்த்திக் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மீராவை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.
வாலிபருக்கு ஆயுள் தண்டனை 
இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுரளி கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் மோகன்தாஸ் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி தங்கவேலு நேற்று தீர்ப்பு கூறினார். 
அதில், குற்றம் சாட்டப்பட்ட பாலமுரளி கார்த்திக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், அபராத தொகையை கொலை செய்யப்பட்ட மாணவியின் தாய் செல்வியிடம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.


Next Story