கலெக்டர் அலுவலக ஊழியர் எனக்கூறி மோசடி செய்ய முயன்றவர் கைது


கலெக்டர் அலுவலக ஊழியர் எனக்கூறி மோசடி செய்ய முயன்றவர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2021 8:15 PM GMT (Updated: 21 Oct 2021 8:15 PM GMT)

திருச்சியில் கலெக்டர் அலுவலக ஊழியர் எனக் கூறி மோசடி செய்ய முயன்ற வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்

திருச்சி
திருச்சி-தஞ்சை ரோடு வரகனேரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் பாஷா (வயது 55). இவரது மகள் பெனாசிர் பாத்திமா. இவரது கணவர் கடந்த ஜூன் மாதம் இறந்தார்.. எனவே, தனது மகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்நிலையில் பாஷாவின் வீட்டிற்கு வந்த ஒருவர், தன்னுடைய பெயர் தேவபிரசாத் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிவதாகவும், தாங்கள் கொடுத்த மனு மீது அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் கல்வித்துறையில் வேலை பெற்று தருவதாக கூறியுள்ளார். பின்னர் பாஷாவின் மகளுக்கு போன் செய்து தனது வங்கிக் கணக்கில் ரூ.30 ஆயிரம் செலுத்துமாறு கூறினார்.
கைது
அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பாஷா, இதுகுறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து பாஷாவிடம் பண மோசடி செய்ய முயன்றதாக சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (35) என்ற வாலிபரை கைது செய்தார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார். 

Next Story