கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற                     3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 21 Oct 2021 8:35 PM GMT (Updated: 21 Oct 2021 8:35 PM GMT)

நித்திரவிளை அருகே கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கொல்லங்கோடு, 
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
தீவிர ரோந்து பணி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி குமரி மாவட்டம் வழியாக கடத்தி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. 
இதை தடுக்கும் வகையில் வருவாய்த்துறையினரும், மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள். 
இந்த நிலையில் கிள்ளியூர் தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி வையோலா பாய் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அப்துல் கபூர், ஊழியர் ரெஞ்சித் ஆகியோர் நேற்று அதிகாலை இனயம் புத்தன்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டெம்போவை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார்.
 ரேஷன் அரிசி பறிமுதல்
இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், தங்களது வாகனத்தில் விரட்டிச் சென்றனர். கிராத்தூர் ஆலுமூடு பகுதியில் சென்றபோது, திடீரென டெம்போ சாலையோரத்தில் நின்ற தென்னை மரத்தில் மோதியது. அதிகாரிகள் விரட்டி வருதை கண்ட டிரைவர் உடனே, அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து அதிகாரிகள் டெம்போவை சோதனை செய்தபோது, மூடை மூடையாக 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. 
 இதையடுத்து அதிகாரிகள் அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், டெம்போவை கிள்ளியூர் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடையர்வர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story