ஊட்டி ரெயில் நிலையத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா


ஊட்டி ரெயில் நிலையத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Oct 2021 1:25 PM GMT (Updated: 22 Oct 2021 1:25 PM GMT)

ஊட்டி ரெயில் நிலையத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஊட்டி

ஊட்டி ரெயில் நிலையத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனால் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரிசோதனை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ரெயில் மூலம் வந்தனர்.

இதற்கிடையில் சமீபத்தில் குன்னூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் பிரிவில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த சக ஊழியர்கள் உள்பட 50 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவு நேற்று வந்தது.

2 ஊழியர்களுக்கு உறுதி

அதில் ஊட்டி ரெயில் நிலையத்தில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டி ரெயில் நிலையத்துக்கு வந்து செல்வதால் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


அங்கு தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி மூலம் இருக்கைகள், அலுவலக பகுதிகள், நடைபாதையில் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

பள்ளி மாணவிகளும் பாதிப்பு

ஊட்டி தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது. தொடர்ந்து மாணவிகள், ஆசிரியைகள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் மேலும் 3 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி மூடப்பட்டு உள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதுடன், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்களை தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story