ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் சங்க கால மக்களின் வாழ்விடப்பகுதிகளில் கண்டுபிடிப்பு


ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில்  சங்க கால மக்களின் வாழ்விடப்பகுதிகளில் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 1:51 PM GMT (Updated: 22 Oct 2021 1:51 PM GMT)

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் சங்க கால மக்களின் வாழ்விடப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது

ஸ்ரீவைகுண்டம்:
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் சங்க கால மக்களின் வாழ்விடப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அகழாய்வுப்பணி
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 10-ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையில்  12 நாட்களாக இந்த அகழாய்வு பணி் நடந்து வருகிறது.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் 10 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 
சங்ககால மக்களின்...
அகழாய்வு பணியில் தற்போது வரை 12 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் அகழாய்வு பணியில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்காக வாழ்விடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொல்லியல்துறை திருச்சி மண்டல இயக்குனர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,," 
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக முதல் கட்ட பணியாக அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகழாய்வு பணியில் தற்போது 12 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெறும் அகழாய்வு பணி 2004-ம் ஆண்டு நடந்த அகழாய்வு பணியை விட முற்றிலும் மாறுபட்டது. மிகவும் நவீன முறையில் கருவிகளை கொண்டு இந்த பணி நடந்து வருகிறது. இந்த பணியில் நாங்கள் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்த வாழ்விடப்பகுதிகளை கண்டுபிடித்துள்ளோம். அந்த இடத்தில் பானைகள், பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கண்டுபிடித்துள்ளோம். இன்னும் தொடர்ந்து நடைபெறும் இந்த அகழாய்வு பணியில் ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக’ தெரிவித்தார்.
அவருடன் தொல்லியல் ஆய்வாளர்கள் அரவாழி, எத்திஸ்குமார், முத்துகுமார், பொறியாளர் கலைச்செல்வன் உள்பட பலர் இருந்தனர்.


Next Story