தொடர் மழை எதிரொலி ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பியது


தொடர் மழை எதிரொலி ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பியது
x
தினத்தந்தி 22 Oct 2021 2:52 PM GMT (Updated: 22 Oct 2021 2:52 PM GMT)

தொடர் மழை எதிரொலியாக ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பியது.

செம்பட்டி:
திண்டுக்கல் அருகே 24 அடி உயரம் கொண்ட ஆத்தூர் காமராஜர் அணை உள்ளது. திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த அணையின் பங்கு முக்கியானது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் மலை, பன்றிமலை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேபோல் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. 
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 15 அடியாக காணப்பட்டது. இந்தநிலையில் தொடர் மழையால் காமராஜர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 22 அடியாக இருந்தது. 
மறுகால் பாய்ந்தது
இந்தநிலையில் நேற்று காலை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 24 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் மறுகால் பாய்ந்தது. அவ்வாறு வெளியேறிய தண்ணீர் குடகனாற்றில் பாய்ந்தோடியது. 
அணை நிரம்பியதால் திண்டுக்கல் மாநகர மக்கள் மட்டுமின்றி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, சின்னாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் காமராஜர் அணை 2 முறை நிரம்பியது. ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு தற்போது அணை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story