ராஜேந்திரம் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்


ராஜேந்திரம் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Oct 2021 7:06 PM GMT (Updated: 22 Oct 2021 7:06 PM GMT)

குடிநீர் குழாயை சீரமைக்ககோரி ராஜேந்திரம் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குளித்தலை, 
சாலை மறியல்
குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராஜேந்திரம் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு வார காலமாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் ராஜேந்திரம் பஸ்நிறுத்தம் எதிரே நேற்று காலிக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
குடிநீர் குழாயில் உடைப்பு
சாலை மறியல் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு ராஜேந்திரம் ஊராட்சியில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையின் அடிப்பகுதி வழியாக சாலையை கடந்து வருகிறது. இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணத்தால் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அவதி அடைந்து வருகின்றனர். எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரிகள் உறுதி
இதையடுத்து குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் ராஜேந்திரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இப்பிரச்சினை குறித்து தகவல் அளித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Next Story