வீட்டின் பூட்டை உடைத்து 18½ பவுன் நகை - ரூ.20 ஆயிரம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து 18½ பவுன் நகை - ரூ.20 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 22 Oct 2021 8:22 PM GMT (Updated: 22 Oct 2021 8:22 PM GMT)

வீட்டின் பூட்டை உடைத்து 18½ பவுன் நகை- ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்:

வீட்டின் பூட்டை உடைத்து...
பெரம்பலூர் 4-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மாதவி ரோடு வி.ஐ.பி. நகரை சேர்ந்த ஜெயராஜின் மனைவி பத்மாவதி(வயது 54). இவரது மகன் ஆனந்த் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பத்மாவதி தனது மருமகள் சவுமியா மற்றும் பேத்தியான 10 மாத கைக்குழந்தையுடன் பெரம்பலூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 16-ந்தேதி அந்த குழந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் குழந்தையை சவுமியாவும், பத்மாவதியும் கூடவே இருந்து கவனித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை குழந்தை குணமடைந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு குழந்தையுடன் பத்மாவதியும், சவுமியாவும் இரவில் வந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நகை- பணம் திருட்டு
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு அறையில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, துணிமணிகள் உள்ளிட்டவை சிதறி கிடந்தன. மேலும் பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 18½ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தன. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏராளமான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் திருட்டு நடந்த சம்பவம் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story