மேலும் ஒரு அம்மன் கோவிலில் துணிகர கொள்ளை


மேலும் ஒரு அம்மன் கோவிலில் துணிகர கொள்ளை
x
தினத்தந்தி 22 Oct 2021 8:42 PM GMT (Updated: 22 Oct 2021 8:42 PM GMT)

கருங்கல் அருகே மேலும் ஒரு அம்மன் கோவிலில் கொள்ளை நடந்துள்ளது.

கருங்கல், 
கருங்கல் அருகே மேலும் ஒரு அம்மன் கோவிலில் கொள்ளை நடந்துள்ளது.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கோவிலில் கொள்ளை
கருங்கல் அருகே கீரியான்தோட்டம் பகுதியில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.
இந்தநிலையில் நேற்று கோவிலுக்கு வந்த நிர்வாகி ராஜசேகர், அங்கு சன்னதி பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நிர்வாகிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, கோவிலில் 20-ந் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது தெரிய வந்தது.
அதாவது கோவிலில் 20-ந் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு கோவில் சுவர் ஏறிகுதித்து மர்மநபர் ஒருவர் அம்மன் சன்னதியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த தாலிசெயின், கண்மலர், நெற்றிச்சுட்டி என மொத்தம் 18 கிராம் தங்க நகைகளை திருடி செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவானது. மேலும் அவர் அரிவாளையும் தூக்கிச் சென்றுள்ளார்.
போலீஸ் தீவிர விசாரணை
கேமராவில் பதிவான காட்சி மூலம் திருடிய மர்மநபர், ஏற்கனவே இதே கோவிலில் திருடிய உண்டியல் நாராயணன் போல் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே 20-ந் தேதி அன்று இரவு அய்யன்விளையில் உள்ள அம்மன் கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்தது. இதனால் 2 கோவில்களிலும் உண்டியல் நாராயணனே கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். 
மேலும் இதுதொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் நாராயணனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கருங்கல் பகுதியில் மேலும் ஒரு அம்மன் கோவிலில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story