தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Oct 2021 8:56 PM GMT (Updated: 22 Oct 2021 8:56 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

சீரமைக்கப்பட்ட மின்கம்பம்
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு பி.எஸ்.புரம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்பட்டது. அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் இருந்தது. இதுபற்றி, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் நட்டு உள்ளனர். நடவடிக்கை எடுத்த மின்வாரிய துறையினரையும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’-க்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நிழற்குடை அமைக்க வேண்டும்
குமரி மாவட்டத்தின் 2-வது நகரமாக திகழும் மார்த்தாண்டத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பஸ்களில் நாகர்கோவிலுக்கு சென்று வருகிறார்கள். இதற்காக மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பஸ் நிறுத்தமும் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மேம்பாலத்துக்கு வந்து பஸ்சில் ஏறி நாகர்கோவிலுக்கு செல்கிறார்கள். ஆனால் மேம்பாலத்தில் பஸ் நிற்கும் இடத்தில் நிழற்குடை இல்லை. இதனால் பகல் நேரத்தில் வெயிலில் காத்திருக்க வேண்டியது உள்ளது. அதே சமயம் மழை பெய்தால் அதில் நனைந்தபடி நிற்க வேண்டியது உள்ளது. எனவே அங்கு ஒரு நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை பாலம் அமைத்ததில் இருந்தே இருந்து வருகிறது.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும்
உண்ணாமலைக்கடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட விரிகோடு பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக கிடைப்பது இல்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் வேறு எங்கும் சென்று குடிநீர் எடுத்து வரவும் வழியில்லை. எனவே எங்களுக்கு சீராக குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியா, விரிகோடு.
பஸ் சேவை அதிகரிக்கப்படுமா?
குளச்சலில் இருந்து கோணங்காடு வழியாக நாகர்கோவிலுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 11 முறை எங்கள் ஊர் வழியாக பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் எங்கள் ஊர் மக்கள் நாகர்கோவில் சென்று வர வசதியாக இருந்தது. ஆனால் தற்போது அது 3 முறையாக குறைக்கப்பட்டு உள்ளது. எனவே பஸ் சேவையை முன்பிருந்தது போல் அதிகரிக்க வேண்டும். அதற்கு அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டோமினிக், கோணங்காடு.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நாகர்கோவிலில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் கோட்டார் கம்பளத்தில் இருந்து ரெயில் நிலையம் வழியாக இடலாக்குடிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே தற்போது மழை ஓய்ந்து உள்ளது. எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.ஏ.நாராயணன், மருங்கூர்.


Next Story