காரைக்குடியில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் கொலை


காரைக்குடியில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் கொலை
x
தினத்தந்தி 25 Oct 2021 5:49 PM GMT (Updated: 25 Oct 2021 5:49 PM GMT)

காரைக்குடியில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளம்பெண் உள்பட 5 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

காரைக்குடி, 
காரைக்குடியில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளம்பெண் உள்பட 5 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வட்டிக்கு பணம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 48). சுமை தூக்கும் தொழிலாளி.
ஆடுகள் வாங்கி விற்பது, வட்டிக்கு பணம் கொடுப்பது போன்ற தொழில்களையும் செய்து வந்தார். இவரிடம் சேர்வார் ஊருணி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி அம்சவல்லி (வயது 20)  வட்டிக்கு பணம் வாங்கினாராம்.
அம்சவல்லியின் கணவர் பிரகாஷ் தன்மீதான வழக்கில் சிறையில் உள்ளார். ஒரு வாரம் முன்பு லட்சுமணன், அம்சவல்லியின் வீட்டிற்கு பண வசூலுக்கு சென்றுள்ளார்.
வெட்டிக்கொலை
 அப்போது அம்சவல்லி, அடிக்கடி பணம் கேட்டு வரவேண்டாம் என்றும், பணம் வரும்போது நானே தருகிறேன் என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சில நாட்கள் கழித்து அம்சவல்லியின் மாமனார் சரவணன் (52) உள்பட 2 பேர் லட்சுமணன் வீட்டிற்கு சென்று அடிக்கடி பணம் கேட்டு வரக்கூடாது என்று தெரிவித்ததுடன், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவில் லட்சுமணன் மின்வாரிய அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை வழிமறித்து ஆபாசமாக பேசி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. 
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த லட்சுமணனை அக்கம்பக்கத்தினர் காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
5 பேர் மீது வழக்கு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், காரைக்குடி துணை சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.  இதுகுறித்து லட்சுமணனின் மனைவி முத்துமீனாள் கொடுத்த புகாரின் பேரில் அம்சவல்லி, சரவணன் உள்பட 5 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story