போதைப்பொருள் வழக்கில் மகனை காப்பாற்ற ஷாருக்கான் தரப்பினர் சாட்சிகளை கலைக்கிறார்கள்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 26 Oct 2021 7:09 PM GMT (Updated: 26 Oct 2021 7:09 PM GMT)

போதைப்பொருள் வழக்கில் மகனை காப்பாற்றும் முயற்சியாக ஷாருக்கான் தரப்பினர் சாட்சிகளை கலைப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கோர்ட்டில் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

மும்பை, அக்.

போதைப்பொருள் வழக்கில் மகனை காப்பாற்றும் முயற்சியாக ஷாருக்கான் தரப்பினர் சாட்சிகளை கலைப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கோர்ட்டில் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தனர். 

 ஜாமீன் மனு

 மும்பை- கோவா சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் (வயது 23) உள்ளிட்டவர்களை கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். 
 அவரது ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மற்றும் சிறப்பு கோர்ட்டு நிராகரித்த நிலையில், மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு முறையிட்டு உள்ளார். 

 சாட்சிகள் கலைப்பு

ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது பதிலளிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில், “ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியது மட்டுமின்றி அவருக்கு போதைப்பொருள் கடத்தலிலும் தொடர்பு உள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு ஏஜென்சிகள் மூலம் விசாரிக்க வேண்டியது உள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ய வேண்டியது உள்ளது. 
இந்த தருணத்தில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானி உள்ளிட்டவர்கள் சாட்சிகளை கலைக்கும் வேலையில் ஈடுபட்டு, விசாரணையை நீர்த்து போக செய்ய முயற்சிக்கிறார்கள். எனவே ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆர்யன் கான் வக்கீல் வாதம்

இந்தநிலையில் நேற்று மாலை நீதிபதி சாம்ப்ரே முன்னிலையில் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கான் தரப்பில் ஆஜரான வக்கீல், ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யவில்லை, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்தநிலையில் அவரை கைது செய்து 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது தவறானது என்று வாதிட்டார். இத்துடன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான வக்கீல் வாதம் முடிவடைந்தது. 
இதையடுத்து விசாரணையை இன்றைக்கு(புதன்கிழமை) தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

ஆர்யன் கானுடன் கைதான அவரது நண்பர் அர்பாஸ் மெர்சந்த் மற்றும் மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோரின் ஜாமீன் மனு மீதான வக்கீல் வாதம் இன்று நடைபெற உள்ளது. இந்த வாதம் நிறைவடைந்த பிறகு ஆர்யன் கான் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவரும்.

 2 பேருக்கு ஜாமீன் கிடைத்தது

இதற்கிடையே சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் தைான மனிஷ் ராஜ்கரியா, அவின் சாகு ஆகிய 2 பேரை நேற்று மும்பை சிறப்பு கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது. இவர்கள் போதை விருந்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு குற்றம்சாட்டி இருந்தது. இந்த வழக்கில் இவர்களுக்கு தான் முதன் முதலாக ஜாமீன் கிடைத்துள்ளது.  
சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story