தனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் 35 பவுன் நகை திருட்டு


தனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் 35 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 27 Oct 2021 4:38 AM GMT (Updated: 27 Oct 2021 4:38 AM GMT)

சென்னை அருகே தனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் 35 பவுன் நகை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் புத்தகரம் சூர்யா நகரைச் சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 45). இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருப்பது தெரிந்தது.

இது குறித்து புழல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Next Story