குடோனில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல்


குடோனில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல்
x
தினத்தந்தி 27 Oct 2021 4:02 PM GMT (Updated: 27 Oct 2021 4:02 PM GMT)

குடோனில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல்

திருப்பூர்
திருப்பூரில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை பறக்கும்டை தாசில்தார் பறிமுதல் செய்தார். மேலும் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
குடோனில் பதுக்கல்
திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகர் கதிரவன் கார்டன் பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தாசில்தார் சுந்தரம் தலைமையிலான குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த குடோனில் இருந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் குடோனுக்குள் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தபோது அங்கு மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. 40 கிலோ, 50 கிலோ எடை அளவில் 67 மூட்டைகள் அங்கிருந்தன. அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட குடோன் உரிமையாளர், அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் உள்ளிட்ட விவரங்களை அருகில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால் சரிவர விவரம் தெரியவில்லை.
3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
இதைத்தொடர்ந்து மொத்தம் 3 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றினார்கள். சம்பந்தப்பட்ட குடோனையும் பூட்டி சீல் வைத்தனர். பின்னர் ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனத்தில் ஏற்றி அங்கேரிப்பாளையம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பறக்கும்படை தாசில்தார் சுந்தரம் கூறும்போது, 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து குடோனில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை பதுக்கியவர்கள் விவரம், குடோன் உரிமையாளர் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை செய்து கைது நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றார்.

Next Story