விவசாயி அடித்து கொலை


விவசாயி அடித்து கொலை
x
தினத்தந்தி 27 Oct 2021 4:57 PM GMT (Updated: 27 Oct 2021 4:57 PM GMT)

ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாத்தூர் சின்ன தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ரவிச்சந்திரன் (வயது 45) விவசாயி. இவரது மகன் தினேஷ் (22) நெல் அறுவடை எந்திர டிரைவர். ரவிச்சந்திரனுக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரவிச்சந்திரன்  தனது வீட்டில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தார்.
 அப்போது அங்கு வந்த   தினேஷ், தனது தந்தையிடம் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் ஏன் இப்படி குடித்து அழிக்கீறிர்கள். உங்களால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று கூறி திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 இதில் ஆத்திரமடைந்த தினேஷ் அருகில் கிடந்த கட்டையை எடுத்து தனது தந்தை என்றும் பராமல் ரவிச்சந்திரனின் தலையில்  சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. 

மகன் கைது

இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக  கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு  செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் பரிதாபமாக இறந்தார். 
இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மீனா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து  தினேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story