தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Nov 2021 6:34 PM GMT (Updated: 1 Nov 2021 6:34 PM GMT)

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்தனர். நண்பகல் 12 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தாய், மகன் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை  கோபுரத் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 28) மற்றும் அவரது தாய் ஆண்டாள்அம்மாள் என்பது தெரியவந்தது. 

 பரபரப்பு

மேலும் வெங்கடேசன் கூறுகையில், 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் தற்காலிமாக பணியாற்றி வந்தேன். 

அந்த சமயத்தில் எனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து 5 நாட்கள் விடுமுறையில் சென்றேன். பின்னர் வேலைக்கு வரும் போது என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து கோவில் இணை ஆணையரை சந்திக்க சென்ற போது என்னை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர். இந்த நிலையில் எனது தற்காலிக பணியில் முறைகேடாக வேறு ஒரு நபரை பணியில் அமர்த்தி உள்ளனர். எனவே நான் பார்த்து வந்த வேலையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து கோவிலில் பேசி நடவடிக்கை எடுப்பதாக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story