சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சர்வதேச தரச்சான்று


சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சர்வதேச தரச்சான்று
x
தினத்தந்தி 4 Nov 2021 6:56 PM GMT (Updated: 4 Nov 2021 6:56 PM GMT)

சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கப்பட்ட சர்வதேச தரச்சான்றை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில், அவசர கால உதவி எண்கள் 100, 112 மற்றும் 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன. நவீன ஒருங்கிணைந்த தரவு தளம் மற்றும் இதர தொழில்நுட்ப கட்டமைப்புகளுடன் அது நிறுவப்பட்டுள்ளது.

இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தில் இதுநாள் வரையில் 1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 லட்சம் காவலன் செயலி பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

தரச்சான்றிதழ்

இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு பிரிட்டிஷ் ஸ்டான்டர்ட்ஸ் நிறுவனத்தினால் ஐ.எஸ்.ஓ. சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இச்சான்றானது, இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டிற்கு பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஸ்டான்டர்ட்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஐ.எஸ்.ஓ. சர்வதேச தரச்சான்றிதழை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் வழங்கினார்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில், உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை கூடுதல் இயக்குனர் (சைபர் கிரைம்) அமரேஷ் புஜாரி, காவல்துறை கூடுதல் இயக்குனர் (தொழில்நுட்ப சேவை) வினித் தேவ் வான்கடே,

காவல்துறை துணைத் தலைவர் (தொழில்நுட்ப சேவை) எஸ். மல்லிகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story