தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு


தந்தை- மகனுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 12 Nov 2021 7:12 PM GMT (Updated: 12 Nov 2021 7:12 PM GMT)

முனைஞ்சிப்பட்டி அருகே தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அருகே தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

அரிவாள் வெட்டு

நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காடன்குளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45) விவசாயி. பரப்பாடி அருகே உள்ள மாங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் சேர்மத்துரை (38), சேகர் (34). இவர்களும் விவசாயிகள்.

முத்துக்குமார், சேர்மத்துரை ஆகியோருக்கு சொந்தமான வயல்கள் காடன்குளம் பகுதியில் அருகருகே உள்ளது. சேர்மத்துரை வயலில் தற்போது நெல் நடுவை போட்டுள்ளார். முத்துக்குமார் அவரது வயலில் நெல் நாற்று பாவி உள்ளார்.
நேற்று முன்தினம் சேர்மத்துரை அவரது வயலில் தேங்கியிருந்த தண்ணீரை முத்துக்குமார் வயலில் வடித்ததாக கூறப்படுகிறது. அதை கண்ட முத்துக்குமார், சேர்மத்துரையிடம், நான் நெல் நாற்று பாவி உள்ளேன். தண்ணீரை எனது தோட்டத்தில் வடித்தால் நாற்று அழுகிவிடும் என கூறியுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சேர்மத்துரை, சேகர் ஆகியோர் முத்துக்குமாரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. அதை தடுக்க வந்த முத்துக்குமாரின் மகன் வெள்ளத்துரைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

அண்ணன்-தம்பி கைது

இதில் படுகாயமடைந்த 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சேர்மத்துரை, சேகர் ஆகியோரை கைது செய்தார்.

Next Story