ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 13 Nov 2021 4:29 PM GMT (Updated: 13 Nov 2021 4:29 PM GMT)

ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். உடைப்பு
ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். ைமயம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 12:30 மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளார். இரும்பு கம்பியுடன் ஏ.டி.எம். அறைக்குள் நுழைந்த அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார். இதுகுறித்து வங்கி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலையடுத்து வங்கி பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
உடனடியாக கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மர்ம ஆசாமி அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடிவிட்டார். 
போலீசார் விசாரணை
போலீசார் மற்றும் வங்கியினர் ஏ.டி.எம். அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் நேற்று முன்தினம் இரவு 12.20 மணியளவில் கண்ணாடி அணிந்த மர்ம நபர் ஒருவர் சிவப்பு சட்டை அணிந்தபடி 2 மாஸ்க் போட்டு ஏ.டி.எம். உள்ளே செல்வது தெரியவந்துள்ளது. கையில் இரும்பு கம்பியுடன் வந்த நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்கிறார். பின்னர் போலீஸ் வருவதை அறிந்ததும் சுதாரித்து வெளியே சென்று விடுகிறார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 
கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகிய தடயங்கள் சேகரித்தனர். இதுதவிர அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ராமநாதபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story