கண்மாய் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது-கிராம மக்கள் சாலை மறியல்


கண்மாய் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது-கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Nov 2021 5:55 PM GMT (Updated: 13 Nov 2021 5:55 PM GMT)

தேவகோட்டை அருகே கண்மாய் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே கண்மாய் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கண்மாய் கரை உடைந்தது

தேவகோட்டை முப்பையூர் அருகே கற்களத்தூர் ஊராட்சியில் உள்ள பொதுவகுடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு அருகில் உள்ள தூணுகுடி கிராம கண்மாய் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. 
கடந்த 2 நாட்களுக்கு மேலாக வீடுகள் அனைத்தும் மழை நீரால் சூழ்ந்தது. இதனால் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

சாலை மறியல்

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் மழைநீர் செல்ல எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து மதுரை-தொண்டி சாலையில் நேற்று காலை கிராம மக்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.இதனால் நீண்ட தூரம் வாகனங்கள் சாலையில் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்ததும் தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவ இடத்திற்கு தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், தாசில்தார் அந்தோணிராஜ், வருவாய் ஆய்வாளர் கண்ணன், தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், மாலதி, மற்றும் பொறியியல் துறையினர் சென்றனர். அங்கு உடைப்பு ஏற்பட்ட கண்மாய் கரையை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story