தஞ்சை மாவட்டத்தில் பருவமழை காரணமாக வீடு, வீடாக சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைத்துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு


தஞ்சை மாவட்டத்தில் பருவமழை காரணமாக வீடு, வீடாக சென்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைத்துறை இணை இயக்குனர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 Nov 2021 4:50 PM GMT (Updated: 14 Nov 2021 4:50 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் பருவமழை காரணமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி வீடு, வீடாக சென்று போடப்பட்டு வருகிறது. இதனை மண்டல இணை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் பருவமழை காரணமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி வீடு, வீடாக சென்று போடப்பட்டு வருகிறது. இதனை மண்டல இணை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோமாரி நோய் தடுப்பூசி

தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பருவமழை காலங்களில் நோய் தாக்குவதில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் கால்நடைகளுக்கு இந்ததடுப்பூசி போடப்படுகிறது.
இந்த பணிக்காக 63 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 63 கால்நடை உதவி மருத்துவர்கள், 63 கால்நடை ஆய்வாளர்கள், 63 கால்நடை உதவியாளர்கள் என மொத்தம் 189 பேர்இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது பருவமழை பெய்து வருவதால் வீடு, வீடாக சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இணை இயக்குனர் ஆய்வு

அதன்படி தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட நாஞ்சிக்கோட்டை, விளார், நா.வல்லுண்டாம்பட்டு, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை ஆகிய 5 ஊராட்சிகளிலும் கால்நடைகள் உள்ள வீடுகளுக்கு சென்று கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கால்நடை உதவி மருத்துவர் செரீப் மற்றும் குழுவினர் இந்த தடுப்பூசியினை போட்டு வருகிறார்கள்.
இதனை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர் சையது அலி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் தடுப்பூசி முறையாக செலுத்தப்படுகிறதா? எனவும், தடுப்பூசி செலுத்தப்பட்ட மாடுகளுக்கு, காதுவில்லை அணிவிக்கப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர். மேலும் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் கோமாரி நோய் தடுப்பூசியை மாடுகளுக்கு போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

Next Story