பண்ருட்டியில் முந்திரி வியாபாரி வீட்டில் ரூ.5¼ லட்சம் நகை கொள்ளை


பண்ருட்டியில் முந்திரி வியாபாரி வீட்டில் ரூ.5¼ லட்சம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 14 Nov 2021 5:40 PM GMT (Updated: 14 Nov 2021 5:40 PM GMT)

மர்ம மனிதர்கள் கைவரிசை

பண்ருட்டி, 

பண்ருட்டி எல்.என். புரம் தில்லை நகரை சேர்ந்தவர் முகமது அனிபா (வயது 36). இவர் பண்ருட்டி காந்தி ரோட்டில் முந்திரி வியாபாரம் மற்றும்  ஆவின் பால் பூத் ஒன்றையும் வைத்து நடத்தி செய்து வருகிறார்.
நேற்று முந்தினம் முகமது அனிபா தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தனது தந்தையை பார்க்க பண்ருட்டி அவுலியா நகரில் உள்ள வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
நேற்று காலை 10 மணிக்கு அவர் தில்லை நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.  அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், அதில் இருந்த 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் முகமது அனிபா புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி துனை போலிஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தீபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.
மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து அது, மோப்பம் பிடித்து, சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யா ரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.5¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story