அரசு பஸ் ஜப்தி


அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 16 Nov 2021 12:04 PM GMT (Updated: 16 Nov 2021 12:04 PM GMT)

திருப்பூரில் விபத்தில் காயம் அடைந்த தொழிலாளிக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

திருப்பூர்
திருப்பூரில் விபத்தில் காயம் அடைந்த தொழிலாளிக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
தொழிலாளி காயம்
திருப்பூர் குமார் நகரை சேர்ந்தவர் சுரேஷ் வயது 43. பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 11-03-2012 அன்று மோட்டார் சைக்கிளில் திருப்பூர்-அவினாசி ரோடு பங்களா பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பூரில் இருந்து அவினாசி நோக்கி சென்ற ஈரோடு கிளைக்கு சொந்தமான அரசு பஸ் சுரேஷ் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். ஆனால் மற்றொருவரின் பராமரிப்பில் சார்ந்தே வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தனக்கு விபத்து நஷ்ட ஈடு கேட்டு, திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுரேஷ் வழக்கு தொடுத்தார். கடந்த 2018ம் ஆண்டு ரூ.17 லட்சத்து 17 ஆயிரத்து 500 விபத்து நஷ்ட ஈடாக அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு கிளை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் விபத்து நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. இந்தநிலையில் கடந்த 2019ம் ஆண்டு மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக ரூ.25 லட்சம் விபத்து நஷ்ட ஈடு வழங்க சமரசம் செய்யப்பட்டது. ஆனாலும் வழங்கப்படவில்லை.
அரசு பஸ் ஜப்தி
பின்னர் சுரேஷ் இதுகுறித்து கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். அதன்படி ஈரோடு கிளைக்கு சொந்தமான திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நிறுத்தியிருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தினார்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் வக்கீல் பழனிசாமி ஆஜராகி வாதாடினார்.


Next Story