குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Nov 2021 4:36 PM GMT (Updated: 17 Nov 2021 4:36 PM GMT)

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே மருங்கூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள  விவசாய நிலங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
 இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்றுகாலை அங்குள்ள விருத்தாசலம்- பவழங்குடி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

 இது குறித்த தகவலின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story