சாலை திடீரென சரிந்து சேதமடைந்ததால் பரபரப்பு


சாலை திடீரென சரிந்து சேதமடைந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Nov 2021 5:00 PM GMT (Updated: 17 Nov 2021 5:00 PM GMT)

கடலூரில் சாலை திடீரென சரிந்து சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூரில் இருந்து விழுப்புரம் மற்றும் புதுச்சேரிக்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கம்மியம்பேட்டை இணைப்பு சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் கம்மியம்பேட்டை இணைப்பு சாலை, கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையுடன் இணையும் இடத்தின் அருகில் தனிநபர் ஒருவர் கட்டிடம் கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று காலை அந்த பள்ளம் தோண்டும் இடத்தின் அருகில் மண் சரிந்து விழுந்தது. மேலும் திடீரென சாலையும் சுமார் 2 அடி அகலத்திற்கு சரிந்து சேதமடைந்தது. இதனால் அந்த இடத்தில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. இதை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். சாலை திடீரென சரிந்த சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story