வீட்டுமனை பட்டா கோரி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முற்றுகை


வீட்டுமனை பட்டா கோரி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 18 Nov 2021 1:32 PM GMT (Updated: 18 Nov 2021 1:32 PM GMT)

வீட்டுமனை பட்டா கோரி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கம் கிராமத்தில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒவ்வொரு குடும்பத்திலும், தற்போது 2 அல்லது 3 குடும்பத்தினர் கூட்டாக வசித்து வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது புதிதாக 180 பேருக்கு அதே பகுதியில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கிட வேண்டும் என கடந்த 3 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களது கோரிக்கை தொடர்பாக அவர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சம்பத் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பாக தாசில்தார் மகேஷிடம் மனு ஒன்றை அளித்து விட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story