மருமகளை தற்கொலைக்கு தூண்டிய தம்பதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


மருமகளை தற்கொலைக்கு தூண்டிய தம்பதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 18 Nov 2021 7:19 PM GMT (Updated: 18 Nov 2021 7:19 PM GMT)

மணப்பாறை அருகே மருமகளை தற்கொலைக்கு தூண்டிய தம்பதிக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருச்சி, நவ.19-
மணப்பாறை அருகே மருமகளை தற்கொலைக்கு தூண்டிய  தம்பதிக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
காதல் திருமணம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வையம்பட்டி அருகே சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரி (வயது 52). இவருடைய மனைவி மாரியம்மாள் (40). இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் விஜயசாந்தி (17) அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி-அஞ்சலை தம்பதியின் மகனை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பக்கிரி-மாரியம்மாள் தம்பதியினர் தனது மகள் விஜயசாந்தியின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சில மாதங்கள் கழித்து விஜயசாந்தியை அவருடைய கணவரும், மாமனார், மாமியாரும் கொடுமை செய்ததாக அவருடைய பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
ஆட்டோவில் இருந்து குதித்து தற்கொலை
இந்தநிலையில் கடந்த 2-2-2015-ம் ஆண்டு விஜயசாந்தியை அவருடைய கணவர், மாமனார், மாமியார் அதே ஊரை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் ஆட்டோவில் வீரப்பூர் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு அனைவரும் சாமி கும்பிட்டனர். அப்போது, கோவில் பூசாரியை பார்த்த போது, விஜயசாந்திக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அதை சரிசெய்ய ரூ.2 ஆயிரம் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் பணம் கொண்டுவரவில்லை என்று கூறி அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டனர்.
அப்போது, ஆட்டோவில் விஜயசாந்தியை அவர்கள் 3 பேரும் தகாதவார்த்தைகளால் கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயசாந்தி ஓடும் ஆட்டோவில் இருந்து சாலையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயசாந்தியின் மாமனார், மாமியார் மற்றும் கணவரை கைது செய்தனர்.
தம்பதிக்கு 7 ஆண்டு சிறை
இந்த வழக்கு திருச்சி தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடந்து வந்தது. இந்தவழக்கில் சாட்சி விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் விஜயசாந்தியை தற்கொலைக்கு தூண்டியதாக சுப்பிரமணி, அஞ்சலை ஆகியோருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனையும் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஹேமந்த் ஆஜரானார். சம்பவம் நடந்த போது விஜயசாந்தியின் கணவருக்கும் 17 வயது என்பதால் அந்த வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு சிறுவர் நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story