பொம்மை துப்பாக்கியால் மிரட்டி வழிப்பறி; 2 ரவுடிகள் கைது


பொம்மை துப்பாக்கியால் மிரட்டி வழிப்பறி; 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 20 Nov 2021 10:03 AM GMT (Updated: 20 Nov 2021 10:03 AM GMT)

வியாசர்பாடியில் பொம்மை துப்பாக்கியால் மிரட்டி வழிப்பறியில் ஈடுப்பட்ட 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரவுடிகள் 2 பேர் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் வழிப்பறி செய்வதாக எம்.கே.பி. நகர் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து உதவி கமிஷனர் தமிழ்வாணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் தனிப்படை அமைத்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் ரவுடிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் பதுங்கி இருந்த வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியை சேர்ந்த நிர்மல் குமார் (வயது 28), செங்குன்றம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (28) ஆகிய 2 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

அதில் ரவுடிகளான நிர்மல்குமார் மீது ஒரு கொலை வழக்கும், சந்தோஷ்குமார் மீது 2 கொலை வழக்குகளும் உள்ளன. மேலும் இவர்கள் இருவரும் அந்த பகுதியில் தனியாக செல்பவர்களிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தது தெரிந்தது.

இவர்களிடம் இருந்து பொம்மை துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story