கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல்; ஆணழகன் பட்டம் வென்றவர் கைது


கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல்; ஆணழகன் பட்டம் வென்றவர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2021 8:49 AM GMT (Updated: 22 Nov 2021 8:49 AM GMT)

திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆணழகன் பட்டம் வென்றவர் கைது செய்யப்பட்டார்.

போலீசில் புகார்

சென்னையை அடுத்த பாலவாக்கத்தை சேர்ந்தவர் சந்தியா மோகன் (வயது 31). இவர் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் மணிகண்டன் (29) என்பவருடன் சமூகவலைதளம் மூலமாக 2019-ம் ஆண்டு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. எனது உணவு முறை குறித்து தனிப்பட்ட பயிற்சி மற்றும் ஆலோசனை பெறுவதற்காக அவரை உடற்பயிற்சி கூடத்தில் அணுகினேன். அதன்பிறகு கடந்த ஆண்டு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோவைக்கு சென்றோம்.

சேர்ந்து வாழ்ந்தோம்

அப்போது மணிகண்டன், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, என்னுடன் உடலுறவு வைத்து கொண்டார். அதன்பிறகு சில மாதங்களாக நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். நாங்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது அதனை அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

தற்போது மணிகண்டன், அந்த வீடியோக்களை காட்டி என்னை துன்புறுத்தி வருகிறார். பலமுறை என்னை சரமாரியாக தாக்கியும் காயப்படுத்தி உள்ளார். மேலும் என்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஆணழகன் பட்டம் வென்றவர்

அதன்பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனிடம் விசாரித்தனர். அதில் அவர், தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த காதலியை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததும் உறுதியானது.

இதையடுத்து பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மணிகண்டன் ஆணழகன் போட்டியில் ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்றுள்ளார்.

கடந்த மாதம் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசித்து வந்தபோது அங்கு பணிபுரிந்து வந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நபரை அவரே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று மருத்துவ உதவி செய்தார். இதுபற்றி அந்த நபர், போலீசில் புகார் தெரிவிக்காததால் மணிகண்டன் கைது செய்யப்படவில்லை. தற்போது காதலியை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.


Next Story